ஒரு விதிமீறல்; ஒரு நொடி ; ஒரு உயிர். #Subashree #whokilledSubashree

#Sritorial

ஒரு விதிமீறல் ; ஒரு நொடி ; ஒரு உயிர்.

விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட ஒரு பேனர் கண்ணிமைக்கும் நொடியில் ஒரு உயிரை கபளீகரம் செய்துள்ளது.

இன்னும் எத்தனை லிட்டர்  இரத்தம் தேவைப்படுகிறது ? ஒரே இரவில் இந்த பேனர்கள் உருவாகவில்லை. பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்காத உத்தரவுகளே இல்லை. எந்த விஷேசமாக இருந்தாலும்  பேனர் வைத்தால் தான் வருவார்களா? என பேனர் சரிந்து உயிரிழந்த சுபஸ்ரீ யின் வழக்கில் நீதிமன்றம் எழுப்பியிருக்கும் ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடி. ஆனால் இதுபோன்ற சாட்டையடிகளெல்லாம் அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. 2017ம் ஆண்டு   நடைபெற்ற எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக கோவைக்கு சென்ற முதல்வரை வரவேற்று வைத்திருந்த அலங்கார வளைவில் மோதி ரகு என்ற இன்ஜினியர் பரிதாபமாக உயிரழந்தார். அப்போதும் சென்னை உயர்நீதிமன்றம் இதேபோன்ற சரமாரியான கேள்விகளை அரசையும் அரசியல்வாதிகளையும் நோக்கி கேட்டிருந்தது. மேலும் விதிமுறைகளை மீறி பேனர் வைப்பதற்கு தடையும் விதித்தது.

 இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளை மட்டும் குறைகூறமுடியாது. திருமணம், சடங்கு, காதுகுத்து என கொண்டாட்டங்களின் போது சாலைகள் பொதுச்சொத்து என்பதையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உரியது என்பதை நாமும்  மறந்தே விடுகிறோம். 10 அடி ரோட்டில் 5 அடியை மறித்து 'அந்த வீட்டுக்கல்யாணம்' இந்த வீட்டுக்கல்யாணம்' என ஜாதியப்பெருமைகளை பந்தாவாக பறைசாற்றிக் கொள்கிறோம். நாம் நம்மளவில் நமக்கு முடிந்த அளவுக்கு விதிகளை மீறினால் அரசியல்வாதிகள் அவர்களின் சக்திக்கேற்ற அளவுக்கு விதிமுறைகளை மீறுகிறார்கள். இங்கே கட்சி மாநாட்டுக்கு பேனர் வைப்பவர் மட்டுமின்றி காதுகுத்துக்கு பேனர் வைப்பர் முதல் தன் ஆதர்சய நாயகனுக்கு கட் அவுட் வைக்கும் ரசிகர்கள் வரை அனைவரும் திருந்த வேண்டும்.

 இந்த விஷயத்தில் மக்களுக்கு முன்னோடியாக அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும். சுபஸ்ரீ யின் மரணத்திற்கு பிறகு முக்கியக் கட்சிகள் முதல் லெட்டர்பேட் கட்சிகள் வரை  பேனர் ஒழிப்பு குறித்து தங்கள் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இவர்கள் அறிக்கைகளெல்லாம் ஒரு உயிர்  காற்றில் கரைந்த பிறகுதான் வெளியாகியுள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம். களத்தில் இருந்த காவல்துறையினர் விதிகளை மீறி  வைக்கப்பட்ட பேனர்களை அகற்றியிருந்தால் இன்றும் சுபஸ்ரீ அதே சாலையில் விக்கெண்ட் உற்சாகத்தில் பறந்திருப்பார். ஹெல்மெட் அணியாமல் சென்றால் 1000 ரூ அபராதம் விதிக்கும் காவக்துறையினர் ஆளும்கட்சியினர் செய்யும் விதிமீறல்களை மட்டும் 'சைலண்ட் மோடிலயே' வேடிக்கை பார்ப்பது புரியாத புதிர்.  நீதிபதிகள் கேட்ட அதே கேள்வியைத்தான் நமக்கும் கேட்க தோன்றுகிறது. ' பேனரில் இருந்த வண்ணம் நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்ததோ?

சுவரில் எழுதப்பட்டிருக்கும் 'நோட்டீஷ் ஒட்டாதீர்' என்ற அறிவிப்பை பார்த்துவிட்டு போஸ்டர் ஒட்டுபவர் கூட ஒட்டாமல் செல்வார். ஆனால் பேனர் விஷயத்தில் நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் அரசியல்வாதிகள் பேனர்களில் போஸ் கொடுத்துக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது? போஸ்டர் ஒட்டும் கூலித்தொழிலாளயிடம் இருக்கும் கட்டுப்பாடும் மாண்பும் கூட அரசாங்கத்திடமும்  அரசியல்வாதிகளிடமும் இல்லை என்பது அவலத்திலும் அவலம்.  பேனர் விவகாரத்தால் இன்னொரு உயிர்  ஆபத்தில் சிக்காத அளவுக்கு உறதியான நடவடிக்கைகள் எடுப்பது மட்டுமே சுபஸ்ரீ யின் ஆன்மா வுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி. இதை அரசும் அரசியல் கட்சிகளும் உளமாற உணர வேண்டும்.

-உ.ஸ்ரீ

Comments

  1. தங்கள் எழு(கரு)த்து சேவை மேலும் சிரக்க வாழ்த்துகள்.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review