உத்த(ம)வ் - புத்திரன் ! - மகராஸ்ட்ரா அரசியல் சூழ்நிலை ஒரு பார்வை | Maharashtra Political crisis | Uththav Thacrey, Devendra Fadnavis |

உத்த(ம)வ் - புத்திரன் !

வாரிசு அரசியல் வாரி தந்த வினை...!


நேற்று இரவு ஒருவரை முதல்வர் என்கிறார்கள் தூங்கி எழுந்து காலையில் பார்த்தால் மாநிலத்தில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி நீக்கப்பட்டு வேறொருவர் வேறொரு கட்சியின் சில பேரின் உதவியுடன் முதல்வராகவே ஆகிவிட்டார். இன்றைக்கு மகாராஷ்டிரா அரசியலில் நடைபெற்ற களேபரத்தை அதிசயம் என்றோ அற்புதம் என்றோ குறிப்பிட்டால் அதிசயமும் அற்புதமும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளும்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்றோடு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த ஒரு மாதமும் மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் கேலிக்கூத்துகளை, மீண்டும் இங்கே நினைவுபடுத்தி எங்கோ ஒரு மூலையில் ஜனநாயகத்தின் மீது இன்னுமும்  நம்பிக்கை வைத்திருப்பவர்களை எரிச்சலூட்ட விரும்பவில்லை நேராக விஷயத்துக்கு வருவோம். தேர்தலுக்கு பிறகான எல்லா குழப்பத்திற்கும் விதை சிவசேனா போட்டது. கடந்த தேர்தலில் கூட சிவசேனா ஆதரவோடுதான் பிஜேபி ஆட்சியை நகர்த்தி சென்றது. சிவசேனா அப்போதெல்லாம் ஏன் முதல்வர் பதவி கேட்கவில்லை. ஏனெனில் இந்த முறை சிவசேனா சார்பில் முதல்வராக முன்னிறுத்தப்பட்டவர் உத்தவின் மகனும் பால் தாக்கரேவின் பேரனும் ஆன ஆதித்யா தாக்கரே. 50:50 டீல் என உதார் விட்டதில் தொடங்கி தேர்தல் முடிவிற்கு பிறகு உத்தவ் தாக்கரே செய்த அத்தனை காரியத்திற்கும் காரணம் தனது வாரிசான ஆதித்யாவை  எப்படியாவது முதல்வர் ஆக்கிவிட வேண்டும் என்ற அரியணை வெறி மட்டுமே.இதே நேரத்தில் சிவசேனா சார்பில் வேறு யாராவது முதல்வர் பதவிக்கு முன்னின்றிருந்தால் உத்தவ் இவ்வளவு அட்டகாசங்களை செய்திருப்பாரா? வாரிசு அரசியல் எந்த எல்லை வரை கொண்டு செல்லும், அதிகாரத்தை அடைய என்னவெல்லாம் செய்யும், எந்த மாதிரியான மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு உத்தவ்-ஆதித்யா கூட்டணி மிக மோசமான முன்னுதாரணமாக வரலாற்றில் இடம்பெறுவார்கள். வாரிசு அரசியல் விஷயத்தில் அனைத்து மாநிலத்திற்கும் சேர்த்து மகாராஷ்டிரா அரசியல் விடுத்துள்ள எச்சரிக்கை மணி இது, தமிழகத்துக்கும் சேர்த்து.

சரத்பவார் இரண்டு நாட்களுக்கு முன்பு மோடியை சந்தித்தபோதே சில யூகங்கள் கிளம்பின. ஆனால் நமக்கு தெரிந்து எந்த வட இந்திய ஊடகமும் இதை பெரிதுபடுத்தியதாக தெரியவில்லை. ஓவர்நைட்டில் ஒரு கட்சியின் மிக முக்கிய தலைவர் இன்னொரு கட்சிக்கு ஆதரவளித்து துணை முதல்வர் ஆகிறார் என்றால் அது நிச்சயம் திட்டமிடப்பட்டதாகவே இருக்கும். ஊடகங்களுக்கு இதைப்பற்றி எந்த க்ளுவூமே கிடைக்காமல் இருந்தார்களா? இல்லை கிடைத்தும் செய்தியாக்காமல் மௌனமாக இருந்து யாருக்கேனும் உதவியிருக்கிறார்களா?

இந்த விஷயத்தில் பிஜேபி யை பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது ?? யார் எழுதி யார் கண்டித்து என்ன பிரயோஜனம்?? கர்நாடகாவிலும், கோவாவிலும் etc....இதேபோன்று ஆளுநரோடு பார்ட்னர்ஷிப் போட்டு பந்தாடியபோதும் எழுதிக்கொண்டுதான் இருந்தோம் என்ன மாறிவிட்டது?

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும். இது மதம் பிடித்த பிஜேபியின் காலம் !

-உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review