Nellai Book Festival - Day 2 | #NellaiBookFestival2020

Nellai Book Festival - Day 2

சண்டே என்பதால் மாலை 6 மணிக்கு மேல் கூட்டம் அதிகமாகவே இருந்தது, புத்தக ஸ்டால்களுக்கு இணையாக ஃபுட் ஸ்டால்களிலும். இன்றைக்கு சித்த மருத்துவர் கு.சிவராமன் சிறப்புரையாற்றுகிறார் என்று அறிந்திருந்ததால் என்னுடைய ஃபோகஸ் முழுவதும்  மேடையின் மீதே இருந்தது.

சாகித்ய அகாடமி விருது வென்ற 'வெட்கை' நாவலாசிரியர் பூமணி உட்பட பல எழுத்தாளர்கள் மேடையேற்றப்பட்டு கவுரவிக்கப்பட்டு உரையாற்றினர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, மேடையில் பேசிய எழுத்தாளர்களிடமிருந்தும் கூட. எழுத்தாளர் ஸ்ரீதரனின் பேச்சு வாட்ஸ் அப் தலைமுறைகளுக்கேற்ற ரத்தினச்சுருக்கம்.

இளம் எழுத்தாளர் ப்ரதீப் வாசிப்பு முறைகள் பற்றியும் வாசிப்பின் மீதான நேசிப்பு குறித்தும் பேசினார். இளம் வயதில் பல புத்தகங்களை எழுதியிருக்கும் இவர் வியக்கவும் வைத்தார், ஊக்கமும் அளித்தார்.

பூமணி ஐயா கையில் மைக் சென்றவுடன், இவர்தான் அசுரன் கதையாசிரியர் என்று விவரமறிந்தவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் காதுகளில் முணுமுணுத்தது பெரும் சத்தமாக கேட்டது. வயது முதிர்வின் காரணமாக பூமணி அவர்களால் பேசமுடியவில்லை என்று நினைக்கிறேன். சிறிய வணக்கத்தோடு முடித்துக்கொண்டார்.

மருத்துவர் சிவராமன் அவர்களின் பேச்சை மட்டும் எதிர்பார்த்து சென்றவர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரனின் பேச்சு. டிவி விவாதங்களில் இவரின் தீர்க்கமான பேச்சை இதற்கு முன்னரே கேட்டிருக்கிறேன். இந்த முறை மடைதிறந்த வெள்ளம் போல பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோர் குறித்த இவரின் ஒப்பீடும் திறனாய்வும் அட்டகாசம். மூவர் குறித்தும் அவர் கூறிய பன்ச் இதோ...

 நினைக்க வேண்டியதை பாடினார் பாரதியார் !

நினைத்ததை பாடினார் பாரதிதாசன் !

நினைத்ததையெல்லாம் பாடினார் கண்ணதாசன் !

இறுதியாக பேசுவதற்கு மருத்துவர் சிவராமன் அவர்கள் அழைக்கப்பட்டதும் ஆங்காங்கு நின்று கொண்டிருந்த மக்கள் அனைவரும் விழா மேடையின் முன் கூடிவிட்டனர். அரங்கமும் நிறைந்தது அரங்கிற்கு அருகிலிருந்த கேலரிகளும் நிறைந்தது. கடைசி பாலில் சிக்சர் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருக்கும் இந்திய அணியின் ஆட்டத்தை எவ்வளவு ஆர்வத்தோடு பார்ப்பார்களோ அவ்வளவு ஆர்வத்தோடு மருத்துவரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தனர் மக்கள். மருத்துவரும் வழக்கபோல வரலாறில் தொடங்கி நவீனம் வரை சிக்சராக விளாசிவிட்டார். அவர் பேசியதில்,

மூளை வன்புணர்ச்சி, தட்டையான சிந்தனை, கீமோதெரபி, நவீன மலம் பரிமாற்றிக்கொள்ளும் சிகிச்சை முறை போன்றவை அதிர்ச்சி ரகம். நேரில் உரையை கேட்காதவர்கள் எதாவது யூடியுப் சேனல்களில் இந்த பேச்சை கட்டாயம் கேட்க வேண்டும்.

நாளை சூழலியலாளர்கள் சிலர் பேசுவதாக அறிகிறேன், மீண்டும் சந்திப்போம்.

நன்றி !

-உ.ஸ்ரீ

#NellaiBookFestival2020

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்